ஞாயிறு, 16 ஜனவரி, 2022

இன்றைய நாணயவியல் நிலை

இன்றைய நாணயவியல்  நிலை.
இந்தப் பதிவு யார் மனதையும் புண்படுத்தவோ அல்லது ஒரு தனி மனிதரைப் பற்றி புகழ்ந்து பேசுவது நோக்கமல்ல.

தொல்லியல் துறையில் பல பிரிவுகள் இருக்கின்றன , அதில்  நாணயவியல்லும் ஒரு  துறை, அந்தத் துறையின் இன்றைய நிலைமை பற்றி என்னுடைய மனதில் தோன்றியதை பதிவு செய்கிறேன். எனது கருத்துக்கு மாற்றுக் கருத்தும் இருக்கலாம். மாற்றுக் கருத்து உள்ளவர்கள் அவர்களின் கருத்தை கீழே பதிவிடவும்.

தொல்லியல் துறையில் பல பிரிவுகளில் உள்ளன, உதாரணத்துக்கு கல்வெட்டுத் துறையை எடுத்துக்கொண்டால் அதில் பல்வேறு புதிய பதிவுகள் நாள்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் தனியார்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பலரும் புதிய கண்டுபிடிப்புகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். அதைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் அந்தந்த கல்வெட்டு உள்ள இடங்களில் சென்று அதை புகைப்படம் எடுத்து அல்லது படிவங்கள்  எடுத்து மேலும் ஆராய்ச்சி செய்யலாம் அதற்கு எந்த வகையான தடையும் இல்லை  அந்த கல்வெட்டில் யாரும் தனியாக சொந்தம் கொண்டாட முடியாது. அதனால் புதிய கண்டுபிடிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. அந்த கண்டுபிடிப்புகளைப் பற்றி வெளியிட்ட ஆவணம் வரலாறு போன்ற புத்தகங்கள் வருடம் தோறும் வெளிவருகின்றன. இது அந்தத் துறையின் வளர்ச்சியை வெளிக்காட்டுகிறது. 

இப்பொழுது நாம் பேச வேண்டிய நாணயவியல் துறையைப் பற்றி பார்ப்போம் இந்திய தொல்லியல் துறையின் சட்டப்படி பழம் காசுகளை  தனியார்கள் சேகரித்து அவர்கள் சேகரிப்பில் வைத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறது. ( இன்றுவரை அந்த சட்டம் மாற்றம் எதுவும் இல்லாமல் இருக்கிறது என்று நினைக்கிறேன்) .
தென்னிந்தியக்காசுகளை( தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திரா போன்ற இடங்களில் கிடைக்கும் காசுகள்)இந்தியா முழுவதும் ஒரு குத்துமதிப்பாக பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் சேகரிக்கிறார்கள். இந்த  சேகரிப்பார்கலில் 10லிருந்து 20 சதவிகிதம் நபர்கள் மட்டுமே ஒரு குறிப்பிட்ட வகையான காசுகளை சேகரிக்கிறார்கள். அதாவது ஒரு குறிப்பிட்ட ஆட்சி காலத்தில் வெளியிட்ட காசுகளை சேகரிப்பார்கள் உதாரணத்துக்கு சோழர்கள், பல்லவர்கள், விஜயநகர் , அல்லது நாயக்கர் மன்னர்கள்  காலகட்டத்தில் வெளியிட்ட காசுகளை தனித்தனியாக சேகரிப்பார்கள். 

1988 லிருந்து 2011 வரை நாணயவியல் துறையில் பல புதிய கண்டுபிடிப்பை பற்றி அடிக்கடி செய்திகள் வெளிவந்தன. ஐராவதம் மகாதேவன் ஆசியுடன்  ஆறுமுக சீதாராமன் அவர்கள், தினமணி  நாளிதழில் பல புதிய கண்டுபிடிப்பு பற்றி 200  கட்டுரைக்கு மேல் எழுதினார், பிறகு அது புத்தக வடிவிலும் வெளிக்கொண்டு வந்தார் அந்த காலகட்டத்தில் பெங்களூரை சேர்ந்த கணேஷ் & டாக்டர் கிரிஜாபதி சந்திரசேகர், சென்னை தொல்லியல் துறையில் தலைவராக இருந்த தலைவர் நாகசாமி அவர்கள் தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பெங்களூரைச் சேர்ந்த நரசிம்ம  மூர்த்தி இங்கிலாந்தில் வசித்த மைக்கேல் மச்சினர் அவர்கள் கேரளாவை சேர்ந்த        பினாசரசன் போன்றோ பலரும்  புத்தகங்கள் எழுதி வெளியிட்டார்கள்.

 தென்னிந்திய நாணயவியல் கழகம் தொடங்கி முப்பத்தி இரண்டு புத்தகங்கள் வெளியிட்டார்கள் அதில் 75 சதவீதம் புதிய கண்டுபிடிப்பாக இருந்தன சென்னை நாணயவியல் கழகம் 13 புத்தகத்தை வெளிக்கொண்டு வந்தார்கள் அதிலும் பல புதிய கண்டுபிடிப்புகள் பற்றிய கட்டுரைகள் இருந்தன. மேலே சொல்லப்பட்ட அனைத்தும் உதாரணமாக  தான் ,மேலும் பல செய்திகள்  / புத்தகங்கள் அந்த காலகட்டத்தில் வெளிவந்து கொண்டிருந்தன. 

2012 இல் இந்தியாவில் முதல் காசுகளை ஏலம் விடும் நிறுவனம் துவங்கப்பட்டது. அதற்குப் பிறகு இன்றுவரை  பதினைந்துக்கும் மேல் ஏல  நிறுவனங்கள்  தொடங்கப்படுகின்றன. ஏல நிறுவனத்தினால்  நாணயவியல்லுக்கு பல நன்மைகளும் பல தீமைகளும் ஏற்பட்டன.

அந்த நன்மை தீமைகளில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது  இதுவரை வெளிவராத காசுகளை  அவர்களது விலைப்பட்டியல் அட்டவணையில் (catalogue), ஒரு சிறிய விளக்கத்துடன் வெளியிட்டார்கள். அந்த செய்தி ஒரு சிறிய அளவு சேகரிப்பாளர் மட்டும் சென்றடைந்தது.  அந்த அட்டவணையில் உள்ள செய்திகள் நாணயவியல் புத்தகமாக வெளி வராததால் இந்த புதிய கண்டுபிடிப்புகள் பற்றி முக்கியத்துவம் வெளியில் தெரியாமல் போனது. அது நாணயவியல் துறைக்கு பெரும் இழப்பாகும்.
மேலும் சமூக வலைத்தளம் மூலம் பல காசுகள்  விற்கப்படுகிறது. அப்படி விற்கப்படும் காசுகளையும் பல புதிய கண்டுபிடிப்புகள் வெளியில் தெரியாமல் தனியார் வசம் சென்றுவிடுகின்றன அவர்கள் யாரும் அந்த காசை பற்றி செய்தியை வெளியிடுவதில்லை புகைப்படத்தை பகிரவும் விரும்பவில்லை அதனால் அந்த காசுகளை பற்றி செய்திகள் குழிதோண்டி புதைக்கப்பட்ட நிலை ஆகிவிடுகிறது. இப்படி இருக்கும் நிலைமையில் கூட சீதாராமன் அவர்கள் கடந்த இரண்டு வருடங்களில் 20க்கும் மேற்பட்ட சிறிய புத்தகங்கள் பல புதிய கண்டுபிடிப்புகள் உடன் வெளியிட்டுள்ளார் . அந்தப் புத்தகம் யாவும் தமிழில் வெளிவந்ததால் அதற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை.

எனது சொந்த அனுபவத்தில் தமிழில் வெளியான மராட்டியர் காசுகளை பற்றி வந்த தமிழ் புத்தகத்தை தமிழ் தெரியாத மராட்டியர்கள் சேகரிப்பார்கள் நிறைய வாங்கினார்கள் அதுபோல் தமிழ் தெரிந்தும் தமிழ் தெரியாமலும் கேரளா காரர்கள் வேணாடு காசுகளை பற்றியும் கொங்கு சேரர்களைப் பற்றி வெளிவந்த புத்தகத்தை அதிகமாக வாங்கினார்கள் மற்ற புத்தகங்கள் அதிகமாக விற்கவில்லை இது ஒரு வருத்தமான செய்திதான்.

இந்தக் இந்த பதிவு மிகவும் நீளமாக வந்ததால் நாணயங்களை ஏலம் விடும் நிறுவனத்தின் மூலமும் தனியார் சேகரிப்பாளர்கள் இடம் உள்ள காசுகளை பற்றி வெளியில் தெரிய வேண்டாம் என்று நினைப்பவர்களால் உண்டாகும் விளைவுகளைப் பற்றியும், தனியாக ஒரு பதிவு இடுகிறேன்.

நாணயவியல்  இன்றைய நிலைமை
சேகரிப்பார்கள் அதிகமாகி இருக்கிறார்கள் அதனால் விலையும் அதிகரிக்கிறது. மேலும் காசுகளை பற்றி விவரம் கிடைக்காததால் காசுகளை பற்றி ஆராய்ச்சி செய்வது அழிவை நோக்கி செல்கிறது. இது எனது சொந்த கருத்துதான்.
மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக